பயணம்: 2
இயற்கை சார்ந்த விடயத்தில் நம் பழங்குடியினர் மரம், சூரியனை வழிபட்ட மாதிரியே காட்டில் வாழும் ஒரு மிக முக்கியமான விலங்கையும் சேர்த்தே பயபக்தியுடன் வழிபாடு செய்து இருப்பார்கள் என்றால் அது யானைகளை மட்டுமே தான் இருக்கும். ஏனெனில் யானைகள் தான் ஒரு காட்டின் பாதுகாவலன் என்பதால் மட்டுமே அல்லாமல் நாம் இந்த வனத்தில் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாக யானைகள் இருப்பதால் கூட அவ்வாறு இருக்கலாம். அப்படி என்ன... அந்த யானைகளுக்கு தனி சிறப்பு..? மரம், சூரியன் போன்று வழிபாடு செய்யும் அளவிற்கு மனிதன் வணங்கி கொண்டு இருந்தான் என்று நம்மில் பலருக்கு சிந்திக்க தோன்றும். மனிதன் ஏன் (தான் உருவாக்கிய) கடவுளை வணங்குகிறான் என்றால் அதற்கு காரணம் தன்னை படைத்தவன், காப்பவன் என்பதால் தானே அதனை தான் யானைகளும் வனத்தை உருவாக்கி அதனை பாதுகாத்து கொண்டு வருகிறது அதனால் தான் நம் முன்னோர்கள் யானைகளையும் இயற்கையின் ஒரு முக்கியமான அங்கமாக கருதி மனசார வணங்கினான்.
இன்னும் பலருக்கு, ஏன் காட்டில் வாழும் மற்ற உயிரினங்களை விட யானைகளுக்கு மட்டும் இத்தனை சிறப்பு என நாம் நினைக்கலாம். அதுவும் நியாயமான ஒரு சிந்தனை தான். அதில் தவறு ஏதும் இல்லை, முதலில் நாம் யானைகளின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொண்டோம் எனில் ஏன் ஆதி மனிதர்கள் அதனை வணங்கினார்கள் என்பது நமக்கு புலனாகும். ஒரு யானை ஒரு நாளில் செய்யும் காரியத்தை நாம் அனைவரும் செய்வதற்கு ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அது ஒரு நாளில் நாற்பது கிலோ மீட்டரில் இருந்து எழுபது கிலோமீட்டர் வரை வனத்தில் நடக்கும், நூறு லிட்டர் வரை நீர் அருந்தும், உணவாக நூறில் இருந்து இருநூறு கிலோ வரை சாப்பிடும் அவ்வளவு பெரிய உருவத்திற்கும் அது நடக்கும் தொலைவிற்கும் அதற்கு இவ்வளவு உணவு, நீர் தேவைப்படும். இப்படி அது சாப்பிடும் உணவில் இருக்கும் பழ, மர விதைகள், மர குச்சிகள் என சாணத்தின் வழியே அது வனத்தில் நடக்கும் எழுபது கி.மீ வரைக்கும் அது பரப்பி கொண்டே வரும். ஒரு மாதத்தில் மட்டும் யானையின் சாணத்தின் வழியே சுமார் மூவாயிரம் மரங்களாவது துளிர்விடும் இப்படியாக தன் வாழ்நாளில் நடும் மரங்களின் எண்ணிக்கையானது லட்சங்களை எல்லாம் தாண்டி செல்லும். ஒரு யானை தன் வாழ்நாளில் இந்த பணிகளை வனத்தில் செய்து கொண்டு வருகிறது என்றால் வழிபாட்டுக்கு உரிய ஒன்று தானே. இது மட்டுமல்லாமல் யானை தண்ணீர் குடிக்க ஆற்றில் இறங்கும் தருணத்தில் அதன் காலடி தடம் சேற்றில் சிக்கி கொள்ளும் அதனால் அது அந்த சேற்றை வாரி விட்டு அந்த சேற்றை எல்லாம் ஒரு புரட்டி எடுத்து விடும்.. அந்த சேற்று மண்ணை தான் வனத்தில் ஒரு வகை குழவிகள் கூடு கட்ட எடுத்து செல்லும்.. யானை இடும் சாணத்தில் பல கோடி சிறு உயிர்களுக்கு உணவாக சாப்பிட்டு தங்கள் வாழ்நாளை நீட்டித்து கொள்ளும் இன்னும் பல வனத்தில் வறட்சி காலத்தில் யானைகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும் இடம் தெரியும் அதனால் மற்ற விலங்குகள் யானைகளை பின் தொடர்ந்து வருவார்கள் தனக்கு மட்டுமே வாழாமல் அனைவருக்குமான ஒரு வாழ்க்கையை வாழ்வதால் தான் யானையை ஒரு வன கடவுகளாகவே ஆதிமனிதன் பாவித்து வணங்கி வந்தான்... ஆனால் இப்போது என்று மனிதன் தன் நிலையை மறந்து வளர்ச்சியின் பின்னால் சென்று தான் உருவாக்கிய சிலைகளுக்கு முக்கியத்துவம் தந்தானோ அன்றிலிருந்து இன்று வரை அந்த யானைகளின் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளது... ஆனாலும் யானைகளின் மீது நம் முன்னோர்கள் கொண்ட பக்தியை மறக்காமல் இருக்கவே, சிலர் யானையின் உருவத்தில் விநாயகர் பெருமானை என்ற உருவ வழிபாட்டை வடிவமைப்பு செய்து அதற்கும் ஒரு சிறப்பு கதையை உருவாக்கி யானை முகத்தான் ஐந்து கரத்தான் என்று நாமும் வேண்டி கொண்டு அதே கோவிலின் வாசலில் யானையை கட்டிவைத்து இருக்கிறோம். யானைகளை கண்டு பாகனிடம் ஐந்தோ பத்தோ அதன் தும்பிக்கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி செல்கிறோம்.. ஆனால் நாம் கொடுக்கும் பணத்தை தன் தும்பிக்கையில் வாங்கும் யானைக்கு எவ்வளவு உடல் ரீதியான பிரச்சினை வருகிறது என்பதை நாம் அறிவதும் இல்லை அது பற்றி தெரிந்து கொள்வதும் இல்லை...
இப்படியாக பல செயல்களில் நாம் இந்த இயற்கையை இயற்கை சார்ந்த பல்லுயிர்களை எந்த அளவிற்கு தன் சுயநலத்திற்காக மாற்றி வருகிறோம். இதனால் நமக்கு ஏற்படும் பல தீமைகளை எவ்வாறு நாம் சரி செய்வது என்பதை அனைவரும் முடிவு எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். நம் வருங்கால தலைமுறை நம்மை வாழ்த்துவதும், தூற்றுவதும் நம் இன்றைய செயல்களில் இருக்கிறது .